வலையொலி பொழுதுபோக்குத் தளமான பாக்கெட் எஃப்.எம், அதன் தளத்தில் பங்காற்றும் எழுத்தாளர்களுக்காக 2024-ம் ஆண்டுக்கான சன்மானமாக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு காணொலி தளத்தில் பங்காற்றிய முதன்மையான 10 எழுத்தாளர்கள் ரூ.2 கோடி வரை பணம் ஈட்டியதாக ஆண்டு இறுதியில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாக்கெட் எஃப்.எம்மின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹன் நாயக், “ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் எங்களுடன் இணைந்து வருகிறார்கள். ஏற்கெனவே தளத்தில் உள்ள எழுத்தாளர்களின் கதைகளை வலையொலி வகைமையில் மாற்றி பெருமளவிலான பார்வையாளர்களை சென்று சேர்க்க உதவுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
வருமானம் சார்ந்து பார்த்தால் 13 வலையொலி தொடர்கள் ரூ.10 கோடி அளவுக்கும் 25 தொடர்கள் ரூ.5 கோடி அளவுக்கும் தனித்தனியாக வருவாய் ஈட்டியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காணாமல் போன இந்திய மாணவி: தகவல் தருபவருக்கு சன்மானம்!
நாடகம், ரொமான்ஸ் மற்றும் அறிவியல் புனைகதை, கற்பனை சார்ந்த வகைமைகள் அதிகமாகக் கேட்கப்படுகிறது. தில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் அதிக கவனிப்பாளர்கள் உள்ளதாக பாக்கெட் எஃப்.எம் தெரிவித்துள்ளது.