அகமதாபாத் :நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து குஜராத் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
சூரத் பகுதியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக முக்கிய கட்சி பிரமுகர்களைக் காவல்துறை கைது செய்தது.
குளிர் காலக் கூட்டத்தொடரில் பாதுகாப்பு அத்துமீறல் குறித்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் 100 எம்.பிக்களும் மாநிலங்களவையில் இருந்து 46 எம்.பிக்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் தோஷி, உள்ளூர் தலைவர்கள், மக்கள் பணியாளர்கள், தொண்டர்கள் குஜராத்தின் முக்கிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக உரிமையின்படி போராட்டம் செய்தாலும் பொய்யான காரணம் காட்டி கைது செய்கின்றனர் என சூரத்தில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தொண்டர் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் ஹிம்மத்சிங் பட்டேல் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த இடைநீக்கத்தில் பாஜகவின் பங்கு இருப்பதைக் குறிப்பிட்டு அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
பாஜக மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கப்படுவதில் இருந்து தப்பிக்க எம்.பிக்களை வெளியேற்றுகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.