தில்லியில் பிரதமர் மோடியை புதிதாக பொறுப்பேற்றுள்ள சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் இன்று சந்தித்தார்.
அவருடன் துணை முதல்வர்கள் அருண் சாவ், விஜய் சர்மா ஆகியோரும் உடன் சென்றனர். தொடர்ந்து அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோரையும் சந்தித்தனர். பின்னர் சத்தீஸ்கர் முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பதவியேற்ற பிறகு முதல் முறையாக இங்கு வந்துள்ளோம். இன்று பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் தன்கர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தோம்.சத்தீஸ்கரில் கடந்த 5 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
ஆனால் தற்போது இரட்டை எஞ்சின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பாஜகவை வெற்றிபெறச் செய்துள்ளனர். தற்போது தடைபட்ட அனைத்து வளர்ச்சிப் பணிகளும் விரைவாக முடிக்கப்படும் என்றார். 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் கடந்த மாதம் இருகட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் 54 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. கடந்த 2018, தோ்தலில் 68 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸுக்கு இம்முறை 35 இடங்களே கிடைத்தன. கோண்ட்வானா கணதந்திர கட்சிக்கு ஓரிடம் கிடைத்தது.
முதல்வா் வேட்பாளரை முன்னிறுத்தாமல் இத்தோ்தலை பாஜக எதிா்கொண்டதால், புதிய முதல்வா் குறித்த எதிா்பாா்ப்பு எழுந்தது. ஏற்கெனவே மூன்று முறை முதல்வராக இருந்த ரமண் சிங் உள்பட பலரின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த விஷ்ணு தேவ் சாய் முதல்வராகத் தோ்வு செய்யப்பட்டாா். அவரது தலைமையில் பாஜக அரசு அண்மையில் பதவியேற்றது. தொடர்ந்து நேற்று அமைச்சரவையில் ஒரு பெண் உள்பட 9 பேர் இன்று அமைச்சர்களாக பதிவியேற்றுக்கொண்டனர்.