தில்லி-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் விரைவு சாலையில் டாக்ஸி ஓட்டுநர் சுட்டுக்கொலை
மானேசர் அருகே தில்லி-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் விரைவு சாலையில் டாக்ஸி ஓட்டுநர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் உள்ள மானேசர் அருகே தில்லி-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் விரைவு சாலையில் கார் ஒன்றில் ஒருவர் இறந்துகிடந்ததை அந்த வழியாக சென்ற நபர் இன்று காலை கண்டுள்ளார். உடனே இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர், இறந்தவரின் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருப்பதைக் கண்டனர். கொலைக்கான சரியான நோக்கம் இன்னும் அறியப்படாத நிலையில், கொலைக்கான காரணம் கொள்ளையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், சந்தேகத்திற்குரிய நபரைக் கைது செய்து விசாரித்த பிறகுதான் நோக்கம் பற்றி எங்களுக்குத் தெரிய வரும் என்று குருகிராம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக மானேசர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.