மகாராஷ்டிரத்தில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தாராஷிவ் நகரில் உள்ள வங்கி ஒன்றில் நேற்று மாலை ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 5 பேர் வங்கிக்குள் நுழைந்தனர். தொடர்ந்து கைத்துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி ஊழியர்களை அவர்கள் மிரட்டினர். பின்னர் சில நிமிடங்களில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்தனர். தொடர்ந்து, வங்கியில் பதிவான சிசிடிவி காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தாராஷிவ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.