ராஜஸ்தானில் ஆட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளதாக முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் விமர்சனம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும், அதனால் அனைத்து துறைகளும் குழப்பத்தில் உள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் திங்கள்கிழமை விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில் கூறியுள்ளதாவது, “டிசம்பர் 3-ஆம் தேதி ராஜஸ்தான் மக்கள் பாஜகவிடம் ஆட்சியதிகாரத்தை வழங்கினர். ஆனால் 22 நாட்களுக்குப் பிறகும் அவர்களால் அமைச்சரவையை அமைக்க முடியவில்லை.
இதனால் ஆட்சியே ஸ்தம்பித்துள்ளது. ராஜஸ்தான் மக்களிடம் தற்போது ஏமாற்றம் பரவத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் அனைத்து துறைகளும் குழப்ப நிலையில் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று ஊடக செய்திகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், எங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்த நிலைமையை தற்போதைய பாஜக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும், புதிய முறை அமல்படுத்தப்படும் வரை முந்தைய முறை தொடர வேண்டும்.” என்று கூறினார்.
இதையும் படிக்க | தெருநாய் கடித்து நான்கு மாத குழந்தை பலி!
முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மக்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.