கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது என்று பிருந்தா காரத் விமர்சனம் செய்துள்ளார்.
கேரளத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் காவலர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியிருந்தார்.
அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து திங்கள்கிழமை பேசிய சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், “ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பேசும் அதே வார்த்தைகளையே காங்கிரஸ் கட்சியும் பேசுகிறது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சியானது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது.
தேசிய அளவில் மோடிக்கு எதிராகப் போரிடுவதைப் பற்றி காங்கிரஸ் பேசுகிறது. ஆனால் கேரளத்தில் அப்படி இல்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். காலையில் என்ன சொல்கிறதோ, அதையே மாலையில் காங்கிரஸ் கட்சியும் சொல்கிறது.
இதுதான் கேரளத்தில் நடக்கக்கூடிய அரசியல். மோடிக்கு எதிராகப் போராடுவதாக சொல்லிக்கொள்ளும் தேசியக் கட்சி இவ்வாறு நடந்துகொள்வதற்கு தேசிய கட்சி இதற்கு வெட்கப்பட வேண்டும்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் பேசியதாவது, “கேரளத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் காவலர்கள் மற்றும் சிபிஐஎம் கட்சியினரால் தாக்கப்படுகின்றனர். தேசிய அளவில் மோடியின் சர்வாதிகார அரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம். கெடுவாய்ப்பாக கேரளத்தில் பினராயி விஜயனின் அரசும் அதைப்போலவே செயல்பட்டு வருகிறது.” என்று குற்றம் சாட்டியிருந்தார்.