கர்நாடக மாநிலத்தில், கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் 7 நாள்கள் தங்களை தனிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
கர்நாடகத்தில், புதிதாக பரவி வரும் கரோனா ஜேஎன் 1 திரிபு வைரஸ் 34 பேருக்கு பாதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, எந்த நிலையையும் எதிர்கொள்ள கர்நாடக சுகாதாரத் துறை தயாராகி வருகிறது.
கர்நாடகத்தில் 430 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 400 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 - 8 பேர் ஐசியூவில் உள்ளனர். தற்போதைய நிலையில், சுகாதார நிலைமை சீராகவே உள்ளது. அபாய நிலையில் எதுவுமில்லை. எனினும் தயார்நிலையில் அனைத்தையும் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கரோனா பாதிப்பு பெங்களூருவில்தான் பதிவாகியிருக்கிறது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில், கரோனா உறுதி செய்யப்பட்டாலோ அல்லது இல்லையென்றாலோ, அறிகுறி தென்பட்டாலே, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு, இலவச சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
சளி மற்றும் காய்ச்சல், இருமல் இருந்தால், மக்கள் கரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவ துறை நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.