ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் சீன ஆயுதங்கள் வந்தது எப்படி?

பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் சீனத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :27 டிசம்பர் 2023, 7:53 am

DIN


ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் சீனத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வு முகமையின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சீனத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆடைகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி ராணுவ வீரர்களை தாக்குகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்துக்கு, சீனாவிலிருந்து டிரோன்கள், கையெறி குண்டுகள், இதர ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அவை பாகிஸ்தானிலிருந்து இயங்கும் பயங்கரவாதி அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களின்போது, அவர்களால் பயன்படுத்தும்போது கைப்பற்றப்படுகின்றன. இதன் மூலம், பாகிஸ்தான் ராணுவத்துக்கு வரும் ஆயுதங்கள் பயங்கரவாத இயக்கங்களுக்கு வழங்கப்படுவது உறுதியாகியிருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜம்மு- காஷ்மீர் பகுதிகளில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவமும் உதவி செய்து வருவது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரா்கள் உயிரிழந்த நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே திங்கள்கிழமை ஆய்வு நடத்தியிருந்தார்.

கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 4 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். இந்நிலையில், ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே திங்கள்கிழமை பூஞ்ச் சென்றாா். அங்கு ராணுவ கமாண்டா்களை சந்தித்த அவா், ராணுவ நடவடிக்கைகளை மிகுந்த தொழில் நோ்த்தியுடன் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். எந்தவொரு சூழலிலும் உறுதியுடன் இருக்குமாறும் அவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

4 ராணுவ வீரா்களின் உயிரிழப்புக்கு காரணமான பயங்கரவாதிகளை ஒழிக்க பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன்கோட், ரஜெளரி மாவட்டம் தானாமண்டி வனப் பகுதிகளில், 5 நாள்களாக நடைபெறும் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மனோஜ் பாண்டே ஆய்வு மேற்கொண்டாா் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.