நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களுடன் இந்தியா உறுதியாக துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் அந்த நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் விளைவாக 18 ஆயிரத்த்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கட்டடங்கள் பலவும் தரைமட்டமாகின. நிலநடுக்கத்தால் தரைமட்டங்களான கட்டடங்களின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியா சார்பிலும் துருக்கிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போதிய மருந்துப் பொருட்களும் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களுடன் இந்தியா உறுதியாக துணை நிற்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவின் ஆபரேஷன் தோஸ்த் குழு துருக்கி நிலநடுக்க மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அவர்களது சிறப்பான இந்த சேவையை தொடர்ந்து வழங்கி பல்வேறு உயிர்களும், சொத்துகளும் மீட்கப்படுவதை உறுதி செய்வர். இந்த நெருக்கடியான சூழலில் துருக்கி மக்களுடன் இந்தியா உறுதியாக துணை நிற்கும் எனப் பதிவிட்டுள்ளார்.