புதுதில்லி: உச்ச நீதிமன்றத்துக்கு மேலும் புதிய நீதிபதிகளாக 2 உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெள்ளிக்கிழமை(பிப்.10) நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டால், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக இருக்கும்.
உச்ச நீதிமன்ற கெலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, "இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ள விதிகளின்படி, அலகாபாத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், குஜராத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகிய 2 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்து அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் பெயர்களை உச்ச நீதிமன்ற கெலீஜியம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டால், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக இருக்கும்.
கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.