திருநங்கைகள் குழுவாக சேர்ந்து இரவு நேரப் பயணிகளுக்கு உணவளிக்கும் வகையில் உணவகம் தொடங்கியுள்ளது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருநங்கைகள் அனைவரும் பொதுவாக அவர்களது குடும்பத்தினராலும், பொது மக்களாலும் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆனால், கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்ககைகள் குழுவாக ஒன்றினைந்து உடுப்பி மாவட்டத்தில் இரவு நேர உணவகம் தொடங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த திருநங்கைகளின் குழுவினைச் சேர்ந்த பூர்வி, வைஷ்ணவி மற்றும் சந்தனா என்ற மூவரும் உடுப்பி மாவட்டத்தின் தெருக்களில் மற்றவர்களிடம் உதவி பெற்று தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவர்கள் தற்போது அதே உடுப்பி பேருந்து நிலையம் அருகில் உணவகம் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர். இந்த உணவகம் நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை செயல்படும். இரவு நேரங்களில் நகரத்தில் உணவு தேடி அலையும் பயணிகளுக்கு இந்த கேண்டீன் ஒரு வரப்பிரசாதமாகும். இரவு நேரப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்த உணவகம் மிகவும் உதவியாக உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
இந்த இரவு நேர உணவகத்தில் சுவையான தின்பண்டங்கள் மற்றும் டீ போன்றன வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இரவு நேரத்தில் அதிக அளவிலான கடைகள் மூடியிருப்பதால் இந்த திருநங்கைகள் தொடங்கியுள்ள கேண்டீன் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்கள் இந்த உணவகத்தில் விற்கப்படும் தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த புதிய கேண்டீனின் மூலம் இதனை ஆரம்பித்த திருநங்கைகள் குழு கன்னியமான வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளனர். இரவு நேர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்கள் இந்த திருநங்கைகளின் உணவகத்தில் சாப்பிடுவது பொதுமக்கள் மத்தியில் அவர்கள் மீதான மரியாதையை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதையும் படிக்க: நிலநடுக்கத்திலும் கொள்ளை; துருக்கியில் 48 பேர் கைது!
எம்பிஏ பட்டபடிப்பு முடித்த சமீக்ஷா என்ற திருநங்கை இந்த உணவகத்தினை தொடங்குவதற்கான பணத்தினை முதலீடு செய்துள்ளார். அவருக்கு உறுதுணையாக அவரது நண்பர்கள் உதவுகின்றனர். அவரது இல்லத்திலிருந்து தற்காலிகமாக மூன்று பேரால் உணவுத் தயாரிக்கப்பட்டு உணவகத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
இது குறித்து சமீக்ஷா கூறியதாவது: பொதுமக்கள் எங்களை ஏற்றுக் கொள்வதுதான் மிகவும் முக்கியம். பொதுமக்கள் ஏற்றுக் கொண்டால்தான் இது போன்ற சிறிய தொழில்களை நடத்த முடியும். இருப்பினும், தன்னம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணத்துடனும் இந்த உணவகத்தைத் தொடங்கியுள்ளோம் என்றார்.