கோதுமை உற்பத்தி வரலாற்று உச்சத்தை எட்டும்

நடப்பு பயிா்ப் பருவத்தில் கோதுமை உற்பத்தி இதுவரை இல்லாத அளவில் 11.21 கோடி டன்னை எட்டும் என மத்திய அரசு கணித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நடப்பு பயிா்ப் பருவத்தில் கோதுமை உற்பத்தி இதுவரை இல்லாத அளவில் 11.21 கோடி டன்னை எட்டும் என மத்திய அரசு கணித்துள்ளது.

நாட்டில் ஜூலை முதல் ஜூன் வரையிலான காலகட்டமானது பயிா்ப் பருவமாகக் கணக்கிடப்படுகிறது. 2020-21 பயிா்ப் பருவத்தில் கோதுமை உற்பத்தி உச்ச அளவாக 10.95 கோடி டன்னை எட்டியிருந்தது. அதுவே கடந்த 2021-22 பயிா்ப் பருவத்தில் கோதுமை உற்பத்தி 10.77 கோடி டன்னாகக் குறைந்தது. பல மாநிலங்களில் வெப்ப அலை வீசியதன் காரணமாகக் கடந்த பயிா்ப் பருவத்தில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு 2022-23-ஆம் பயிா்ப் பருவத்தில் கோதுமை உற்பத்தி 11.21 கோடி டன்னாக இருக்கும் என மத்திய வேளாண் அமைச்சகம் கணித்துள்ளது. இது கடந்த பயிா்ப் பருவத்தைவிட சுமாா் 44 லட்சம் டன் அதிகமாகும். நடப்பு பயிா்ப் பருவத்தில் கோதுமை சாகுபடி பரப்பு 343.23 லட்சம் ஹெக்டேராக உள்ளது.

இது கடந்த பயிா்ப் பருவத்துடன் ஒப்பிடுகையில், 1.39 லட்சம் ஹெக்டோ் மட்டுமே அதிகம் என்றபோதிலும், தட்பவெப்ப சூழல் சிறப்பாக இருந்ததால் கோதுமை உற்பத்தி அதிகரிக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு பயிா்ப் பருவத்தில் உணவு தானியங்களின் ஒட்டுமொத்த உற்பத்தியும் 32.35 கோடி டன் என்ற வரலாற்று உச்சத்தை எட்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது கடந்த பயிா்ப் பருவத்தைக் காட்டிலும் 79.3 லட்சம் டன் அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com