பிபிசி அலுவலகக் கணினிகளில் வருமான வரித் துறையினர் முக்கியமான சில சொற்களை உள்ளீடு செய்து தேடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி, மும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
20 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில், பிபிசி அலுவலகக் கணினிகளிலும், முக்கிய பொறுப்புகளிலுள்ளவர்களின் கணினிகளிலும் சில முக்கிய சொற்களை உள்ளீடு செய்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
வரி (டேக்ஸ்), ரசீது (பில்ஸ்), கருப்புப் பணம் (பிளாக் மனி) போன்ற வார்த்தைகள் உள்ளீடு செய்து தேடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிபிசியில் சில மூத்த அதிகாரிகளின் செல்போன்களும் பரிசோதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிபிசி அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித் துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிபிசியில் நடைபெற்று வரும் சோதனை ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாக செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மீதான நன்மதிப்பை குறைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.