டேஹ்ராடூன்: புதைந்துவரும் ஜோஷிமட் நகரில் ஏற்பட்டிருக்கும் விரிசல்கள் எப்படிப்பட்டன என்பது குறித்து மாநில அரசின் ஸ்ரீ தேவ் சுமன் உத்தரகண்ட் பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழு ஆய்வு செய்து, அறிக்கையை அளித்துள்ளது.
அந்த அறிக்கையில், ஜோஷிமட்டில் ஏற்பட்டிருக்கும் விரிசல்கள் எப்படிப்பட்டன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஜோஷிமட் விரிசல் என்பது 2 அடி அகலமும் அரை கிலோ மீட்டர் ஆழத்துக்கு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விரிசல் ஏற்படத் தொடங்கி முதல் முறையாக அரசு அதிகாரப்பூர்வமாக பாதிப்பின் தீவிரத் தன்மை குறித்த தகவல்களை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை, நிலப்பரப்பின் நிலவரங்களை ஆய்ந்து நிலைமையை துல்லியமாக அளவிடும் வகையில், பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒரு நிபுணத்துவம் கொண்ட குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன.
இந்த அறிக்கை உத்தரகண்ட் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மனோகர் பாக் பகுதியில் ஏற்பட்டிருக்கும் விரிசல் என்பது 2 அடி ஆழத்துக்கு அதாவது ஒரு மனிதன் அந்த விரிசலுக்குள் நிற்கக் கூடிய அளவில் இருக்கும். அந்த விரிசலின் ஆழமானது கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு இருக்கிறது. எந்த விரிசலையும் மூடினாலும் அடைத்தாலும் மீண்டும் அது உருவாகிவிடுகிறது, உருவாகிவிடும் என்பதையும் ஆய்வுக்குழு தெளிவுபடுத்தியிருக்கிறது.
சுரங்கம் தோண்டும்போது போரிங் இயந்திரங்களின் அதிகப்படியான அழுத்தமும் அதிக நீர்க்கசிவும் இந்த பேரிடருக்குக் காரணங்கள் என்று கண்டறிந்திருக்கும் இந்தக் குழுவின் கூற்றை, என்டிபிசி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
உத்தரகண்டின் ஜோஷிமட் நகரம் புதைந்து வரும் நிலையில், மக்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
உத்தரகண்டில் பத்ரிநாத் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கும் புகழ்பெற்ற பனிச்சறுக்கு சுற்றுலாத் தலமான அவுலிக்கும் நுழைவு வாயிலாக உள்ள ஜோஷிமட் நகரத்தின் நிலப்பகுதி அண்மைக் காலமாக தாழ்ந்து வருகிறது. வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் பெரிய அளவிலான விரிசல்கள் விழுந்து, மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியது.
ஜோஷிமட் மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ள இப்பிரச்னை, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்
ஜோஷிமட்டில் சேதமடைந்த கட்டடங்கள், வீடுகள் இடிக்கும் பணி, கடும் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடா்ந்து, அந்தப் பணி கடந்த வாரம் மீண்டும் தொடங்கப்பட்டது.
மொத்தம் 849 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன; இதுவரை 269 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள், தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா். கடும் குளிா் நிலவி வருவதால், தற்காலிக முகாம்களில் கூடுதல் வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.