தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் இரவு முழுவதும் கவுன்சிலர்களின் அமளி தொடர்ந்த நிலையில் நாளை காலை 10 மணிவரை மாநகராட்சிக் கூட்டத்தை ஒத்திவைப்பதாக மேயர் ஷெல்லி ஓபராய் அறிவித்தார்.
தில்லி மேயர் தேர்தல் நேற்று(புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் தொடங்கிய நிலையில் மேயா், துணை மேயரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.
மேயராக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் ஷெல்லி ஓபராய், துணை மேயராக ஆம் ஆத்மி வேட்பாளா் ஆலே முகம்மது இக்பால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்பிறகு 6 நிலைக் குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கியபோது அமளி ஏற்பட்டது. வாக்களிக்க கைப்பேசியை எடுத்துவருவதற்கு உறுப்பினா்களை அனுமதிக்க ஷெல்லி ஓபராய் முடிவு செய்ததற்கு பாஜக கவுன்சிலா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் இந்த அமளி ஏற்பட்டது.
தொடர்ந்து இரு தரப்பு கவுன்சிலர்களின் மோதல் கைக்கலப்பில் முடிவடைந்தது. இதனால், நேற்று இரவு முழுவதும் மாநகராட்சிக் கூட்டம் நீடித்தது. ஒவ்வொரு முறை ஒத்திவைப்புக்கு பிறகு கூடும்போதும் கவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் இரவு முழுவதும் 13 முறை மாநகராட்சிக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், காலையும் அமளி தொடர்ந்ததால் நாளை காலை 10 மணிவரை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நாளை காலை கூடும் கூட்டத்தில் நிலைக் குழு உறுப்பினர்கள் தேர்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் தில்லி மாநகராட்சிக் கூட்டம் தொடர்ந்த நிலையில் சில கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிலேயே படுத்து உறங்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.