கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று இரண்டாவது நபருக்கு பாதித்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,
தென்கிழக்கு ப்ரேவெங் மாகாணத்தைச் சேர்ந்த 49 வயது நபருக்கு ஹச்5என்1(H5N1) வைரஸ் தொற்று இருப்பதை தேசிய பொது சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. கம்போடியாவில் பறவை காய்ச்சல் பாதித்த இரண்டாவது நபர் இவராவர்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 16-ம் தேதி ப்ரேவெங் மாகாணத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பறவைக் காய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது அவரது தந்தைக்கும் இந்த காய்ச்சல் பரவியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபருக்கு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை. உயிரிழந்த சிறுமியைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அவரது தந்தை மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய 11 பேரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த 2014 ஆண்டுகளுக்குப் பிறகு, பறவைக் காய்ச்சல் பாதித்த இரண்டாவது நபர் இவராவார். H5N1 பறவைக் காய்ச்சல் மனித ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
1997ல் சீனாவில் முதல் முறையாக மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டன.
பறவைக் காய்ச்சல் எனப்படும் ஹச்5என்1 வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். மேலும் உயிருக்கு ஆபத்தான நிமோனியா காய்ச்சலை இரு உருவாக்கும்.
கம்போடியாவில் 2003 முதல் 2014 வரை 56 பேர் ஹச்5என்1 (H5N1) வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 37 பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.