ராஜஸ்தானில் ஆசிரியர் பணிக்கான தேர்வுத்தாள் கசிந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2 ஆம் நிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த தோ்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால், தோ்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர் இந்த தேர்வு கடந்த மாதம் 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேலும் இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது அம்மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பூபேந்திர சரண் தலைமறைவானார்.
சரண், தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றியதால் அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பூபேந்திர சரணை பற்றிய தகவல் தெரிவிப்பபருக்கு ரூ.1 லட்சம் பரிசும் காவல்துறையினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் பூபேந்திர சரண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டதாக ராஜஸ்தான் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க- பிப்.27, 28-இல் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கடந்த 6 நாட்களாக பெங்களூருவில் முகாமிட்டு சரண் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரணை, பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்த காவல்துறையினர் பின்னர் விசாரணைக்காக உதய்பூர் அழைத்து வந்தனர்.