காங்டோக்: நாட்டிலேயே மக்கள் தொகைக் குறைந்த மாநிலம் என்ற பட்டியலிலிருந்து முன்னிலைக்கு வரும் வகையில், குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சிக்கிம் முதல்வர் அறிவித்துள்ளார்.
குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் மக்கள் தொகையில் மிகக் குறைவான மக்களுடன் கடைசி இடத்தில் இருக்கும் நிலையை மாற்றி முன்னிலைக்குக் கொண்டு வரும் வகையில் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும், மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மற்ற மாநில அரசுகள் அறிவிக்கும் முன்பே, சிக்கிமில் முதல் குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறையும் தந்தைக்கு 30 நாள்கள் விடுமுறையும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிறப்பு விகிதம் குறைவதை உடனடியாகத் தடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். சிக்கிமின் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருகிறது. இங்கு ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில்தான் உள்ளது என்று மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது.
மேலும், சிக்கிம் மக்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு பல நிதி உதவிகள் வழங்கப்படும் என்றும், குழந்தைகள் பிறக்காத பெண்களுக்கு ஐவிஎஃப் முறையில் சிகிச்சை அளிக்கும் வசதியை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தவும் அரசு முன்னெடுத்துள்ளது.