மத்தியப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்தவரால் சிறுநீர் கழிக்கப்பட்ட இளைஞருடன் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் மதிய உணவருந்தினார்.
முன்னதாக பழங்குடியின இளைஞரின் கால்களைக் கழுவி, நடந்த சம்பவத்துக்கு முதல்வர் மன்னிப்புக்கோரினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா் தாஸ்மத் ராவத் மீது பாஜகவைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்ற நபா், சிறுநீா் கழித்த சம்பவம் குறித்த விடியோ சமூக ஊடகங்களில் புதன்கிழமை வேகமாகப் பரவியது.
இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தைத்தொடர்ந்து முதல்வரின் இல்லத்துக்கு பழங்குடியின இளைஞர் அழைக்கப்பட்டார். வியாழக்கிழமை காலையில் வரவழைக்கப்பட்ட பழங்குடியினர் இளைஞரின் கால்களை முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கழுவிவிட்டு நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார்.
அதனைத் தொடர்ந்து இளைஞருடன் சமமாக அமர்ந்து மதிய உணவை உண்டார். இது தொடர்பாக விடியோ தற்போது பகிரப்பட்டு வருகிறது.