தொடரும் கனமழை: ஜம்மு-காஷ்மீரின் இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
மூன்றாவது நாளாக தொடரும் கனமழையால் ஜம்மு-காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதையடுத்து இந்த சிவப்பு எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: வாரம் ஒரு வந்தே பாரத் ரயில்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
இது தொடர்பாக பேசிய வானிலை மைய அதிகாரி கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்கள் கனமழையால் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதால் இந்த இரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கதுவா, சம்பா மாவட்டங்களை தவிர்த்து ரம்பன், தோடா, உதாம்பூர் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்துக்கு கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.
சிவப்பு எச்சரிக்கை 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்து 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழையைக் கொடுக்கும்போது விடுக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.