தில்லியில் தொடர்மழை: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தில்லயில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தில்லியின் பல்வேறு இடங்களில் மழைநீா் நீா் தேங்கி, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் தில்லியின் ஜாகிரா பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்தனர். இன்றும் கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 153 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழையாகும்.
இதனிடையே தில்லிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில தலைநகரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிறப்பித்துள்ளார்.
மேலும் அனைத்து துறை ஊழியர்களின் விடுமுறையை ரத்து செய்த அவர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.