வாராணசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது கடையில் உள்ள தக்காளிகளை பாதுகாக்க 2 பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.
நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை, கடந்த சில மாதங்களில் வெப்பம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் அஜய் ஃபௌஜி என்கிற வியாபாரி ஒருவர் தனது கடையில் உள்ள தக்காளிகளை பாதுகாக்க 2 பாதுகாவலர்களை நியமித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கடைக்கு வருபவர்கள் திருட்டில் ஈடுபடுகின்றனர். மேலும வன்முறையும் செய்கின்றனர்.
அதனால்தான் பாதுகாவலர்களை நிறுத்தியுள்ளேன். ஒரு கிலோ ரூ.160க்கு விற்பதால் 50, 100 கிராமுக்கு தக்காளி வேண்டும் என கேட்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த விடியோவை ரிட்வீட் செய்து, யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் கட்சியை கிண்டல் செய்து, “தக்காளிக்கு பாஜக ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.