மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம்!

பிரான்ஸ் தேசிய தினத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், ஐரோப்பா நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து  தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம்!
Published on
Updated on
1 min read

பிரான்ஸ் தேசிய தினத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், ஐரோப்பா நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து  தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தினை மணிப்பூர் மாநிலத்தில் திரும்ப பெற வேண்டும் எனவும், மாநிலத்தில் மீண்டும் இணைய சேவைகளை வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து ஐரோப்பா நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் மனித  உரிமைகள் மீறப்பட்டுள்ளன. பலர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் வன்முறையில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையினர்கள், மக்கள் மற்றும் அவர்களது மனித உரிமைகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல கடினமான சவால்களைக் கடந்து வர வேண்டியுள்ளது. அவர்களது உரிமைகள் மீறப்படுகின்றன. மணிப்பூரில் நடைபெறும் வன்முறை இன ரீதியாகவும், மத ரீதியாகவும் நடைபெறுகிறது. முக்கியமாக ஹிந்துக்கள் அதிகமுள்ள மைதேயி இனத்தினருக்கும், கிறிஸ்தவத்தை பின்பற்றும் குகி இன மக்களுக்கும் இடையே இந்த வன்முறை நீடித்து வருகிறது.

இந்த வன்முறையால் இதுவரை 100-க்கும்  அதிகமானோர் இறந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவர்களது இருப்பிடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பொதுச் சொத்துகள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மணிப்பூரில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு இனம்சார்ந்த அரசியல் செய்கிறது. அதனால், சில மதங்களில் உள்ள சிறுபான்மையினரை நசுக்குகிறது. மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய விதத்தில் உள்ள ஆயுதப்படை சிறப்புச் சட்டம் மாநிலத்தில் இருந்து திரும்ப பெறப்பட வேண்டும். மாநிலத்தில் இணைய சேவையினை மீண்டும் தொடங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் இன்று (ஜூலை 13) பிரான்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com