மணிப்பூர் நிலவரத்தைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் மகளிர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.
இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மணிப்பூரில் வன்முறை தொடங்கிய நேரத்தில், கடந்த மே 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பாஜகவின் பிரிவுபசார சந்திப்புதான் தில்லி கூட்டம் : அகிலேஷ்
இந்நிலையில் மணிப்பூர் நிலவரத்தைக் கண்டித்து, குறிப்பாக இரு பெண்களுக்கு நடைபெற்ற பாலியல் வன்முறையைக் கண்டித்து தில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மகளிர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டு வருகின்றனர்.
மணிப்பூர் பெண்களின் நிலை கண்டு பிரதமர் மோடி கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார் என்றும் மோடி அரசின் இந்தக் கோழைத்தனம் வரலாற்றில் நினைவுகூரப்படும் என்றும் தேசிய மகளிர் காங்கிரஸின் செயல் தலைவர் நெட்டா டிசோசா தெரிவித்தார்.
இதையும் படிக்க | மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: குஷ்பு