மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பஞ்சாப் அரசு விரைவில் 8 நவீன பயிற்சி மையங்களை திறக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மத்திய அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு குறிப்பாக யுபிஎஸ்சி தேர்வு எழுதி பணிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிக அளவிலான திறமை இருந்தும் பஞ்சாபைச் சேர்ந்த இளம் தலைமுறையினர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற சிரமப்படுகிறார்கள். அதற்கு முதல் காரணம் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற அவர்களது எண்ணம் ஆகும். அடுத்து, மாநிலத்தில் போதிய அளவில் பயிற்சி மையங்கள் இல்லாதது. இந்த நிலையை மாற்ற பஞ்சாப் அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இதையும் படிக்க: மணிப்பூரில் குற்றவாளிகளின் வீடுகளை தீ வைத்து எரித்த பெண்கள்!
பஞ்சாபில் விரைவில் 8 நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையங்களை திறக்க உள்ளோம். இந்த பயிற்சி மையங்கள் இலவசமாக தரமான பயிற்சியை தேர்வர்களுக்கு வழங்கும். இதன்மூலம், பஞ்சாபிலிருந்து தேர்வர்கள் அதிக அளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் மற்ற மத்திய அரசின் பிற பதவிகளுக்கு தேர்ச்சி பெறுவர். நாட்டின் வளர்ச்சிக்கு சேவையாற்ற இருக்கும் அதிகாரிகள் பஞ்சாபிலிருந்து உருவாக்கப்படுவார்கள். இந்த பயிற்சி மையங்களை திறப்பதற்கு ஒரே முக்கியக் காரணம் பஞ்சாப் இளைஞர்கள் நாட்டின் உயரிய பதவிகளுக்கு சென்று நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.