நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மணிப்பூர் வன்கொடுமை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமரை பேச வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வழங்க எதிர்க்கட்சிகள் நேற்று முடிவு செய்தன.
அதன்படி, காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய், பாரத ராஷ்டீரிய சமிதி கட்சியின் நாகேஸ்வர ராவ் உள்ளிட்டோர் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவையில் இன்று அளித்தனர்.
இதையடுத்து, நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
மேலும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசித்து விவாதம் எப்போது என பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளன.