எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டடத்தில் ஆலோசனை

எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டடத்தில் ஆலோசனை

மணிப்பூர் சென்று வந்த எம்.பி.க்களுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் தில்லியில் ஆலோசனை நடத்தினர். 

மணிப்பூர் சென்று வந்த எம்.பி.க்களுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் தில்லியில் ஆலோசனை நடத்தினர். 

நாடாளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனையில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, டி.ஆர்.பாலு, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மணிப்பூரில் தற்போதைய நிலவரம் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்களிடம் எம்.பி.க்கள் எடுத்துரைத்தனர். மேலும் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய விவாதம் தொடர்பாக தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்த பிரச்னையை முன்வைத்து, இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ஆம் தேதி கலவரம் மூண்டது. அதன் பிறகு நீடிக்கும் வன்முறைகளில் உயிா்ச்சேதங்களும் பொருள்சேதங்களும் நேரிட்டு வருகின்றன.

மணிப்பூா் நிலவரம் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக, 26 எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த 21 எம்.பி.க்கள் சனிக்கிழமை மணிப்பூருக்கு சென்று நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா். தொடர்ந்து நேற்று மாநில ஆளுநா் அனுசுயா உய்கேவை, இம்பாலில் உள்ள ஆளுநா் மாளிகையில் எம்.பி.க்கள் குழு சந்தித்து மனு அளித்தது. 

மணிப்பூரில் அமைதி-நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில், மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com