ஊழல் விவகாரத்தில் தேவையின்றி ராஜஸ்தான் மாநிலத்தின் நற்பெயருக்கு பாஜக களங்கம் விளைவிப்பதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக தனது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தானின் சஞ்சோர் பகுதியில் ரூ.2,210 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு பாஜகவிடம் பதில்கள் கிடையாது. ஊழல் தொடர்பாக பொதுமக்களிடம் தேவையின்றி ராஜஸ்தானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பாஜக செயல்படுகிறது. எனது தலைமையிலான ஆட்சியில் மாநிலத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் யாரையும் எளிதில் விட்டுவிடவில்லை. 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக ராஜஸ்தான் மாறும் என்றார்.