ஒடிசா ரயில் விபத்தில் 3 ஓட்டுநர்களின் நிலை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி விபத்துக்குள்ளான 2 விரைவு ரயில்களின் ஓட்டுநர்கள் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ரயில்வே அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். அதேசமயம் சரக்கு ரயிலின் ஓட்டுநர் மற்றும் மற்றும் உதவியாளர் காயமின்றி தப்பினர் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் 747 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் 56 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில்கள் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.