ஒடிசா ரயில் விபத்து: உயர்நிலைக் குழு விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரிய வரும்: அஸ்வினி வைஷ்ணவ்

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் உயர்நிலைக் குழு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 
ஒடிசா ரயில் விபத்து: உயர்நிலைக் குழு விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரிய வரும்: அஸ்வினி வைஷ்ணவ்
Published on
Updated on
1 min read


புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் உயர்நிலைக் குழு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த ரயில் விபத்தை சனிக்கிழமை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  கோர விபத்தின் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளது. தற்போது, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறோம்.

ரயில்வேத் துறை, மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையின்ர், தீயணைப்பு வீரர்கள் குழு, தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விபத்து குறித்து உயர்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னரே ரயில்கள் விபத்துக்கான காரம் தெரிய வரும். 

ரயில் விபத்து குறித்து தன்னிச்சையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை நடத்தப்படும். மீட்புப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இக்கட்டான இந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.  

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ரயில் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சிறியளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com