அவிநாசி: அவிநாசி அருகே 3 ஊராட்சிகளில் ஆற்று குடிநீர் வராததை கண்டித்து, அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து வெள்ளிக்கிழமை காலி குடங்களுடன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னேரி பாளையம், பழங்கரை, குப்பாண்டம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ஆற்று குடிநீர் வருவதில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை காலை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அவிநாசி ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தர்னா போராட்டம் தொடர்கிறது. இதையடுதது போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.