பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான இருதரப்பு உறவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். பிரதமரின் இரண்டு நாள் எகிப்து பயணமும் மிகவும் முக்கியமானதான இருக்கப் போகிறது.
அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு சிறப்பானதாக அமைந்தது. பிரதமரின் இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தற்போது பிரதமரின் எகிப்து பயணமும் பல நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது. இந்தியாவிற்கு மட்டுமின்றி ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற நாடுகளுக்கும் இந்த பயணம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிக்க: உத்தரப்பிரதேச கொலையில் திருப்பம்: புதுமணத் தம்பதி பலியான சோகம்
வளைகுடா நாடுகளுடன் இந்தியா வலுவான நட்புறவைக் கொண்டுள்ளது. பிரதமர் முதல் முறையாக எகிப்துக்கு செல்கிறார். இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகிறது. அமெரிக்காவில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பிறகு அவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை குலுக்கவும், ஆட்டோகிராஃப் பெற சூழ்ந்து கொண்டதுமே அவர் உலகத் தலைவர் என்பதற்கான சான்று. என்னால் இதனை நம்பிக்கையுடன் சொல்ல முடியும். வெளியுறவுக் கொள்கை தொடர்பான என்னுடைய 39 ஆண்டுகால தனிப்பட்ட அனுபவத்தில் இது போன்ற ஒரு நிகழ்வை ஒரு போதும் பார்த்ததில்லை என்றார்.