புதுதில்லி: தில்லியில் இன்று காலை திடீர் வானிலை மாற்றத்தால் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது.
தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று கணித்திருந்தது. இந்த நிலையில் இன்று (மார்ச் 1) காற்றுடன் மழை பெய்தது தில்லி மக்களை மகிழ்ச்சியில் அழ்த்தியது.
தில்லி வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கடந்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. இன்று அதிகபட்சமாக 32 டிகிரியும் குறைந்தபட்சமாக 14 டிகிரி வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 27.7 டிகிரியாக இருந்தது. இது கடந்த 17 ஆண்டுகளில் அதிக வெப்பம் எனக் கருதப்படுகிறது. இந்த அசாதாரண வெப்பநிலைக்கு மழை இல்லாததே காரணம் என்று வானிலை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.