தில்லி அமைச்சரவையில் இருந்து மணீஷ் சிசோடியா விலகிய நிலையில் அவரது துறைகள் கைலாஷ் கெலாட், ராஜ்குமார் ஆனந்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. மேலும் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மணீஷ் சிசோடியா, துணை முதல்வர் மற்றும் அமைச்சரவையில் இருந்து பதவி விலகினார்.
இந்நிலையில் புதிய அமைச்சர் நியமிக்கப்படும் வரை, மணீஷ் சிசோடியா, கவனித்து வந்த துறைகள் வேறு இரு அமைச்சர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, நிதி, திட்டமிடல், பொதுப்பணித் துறை, மின்சாரம், உள்துறை, நகர்ப்புற வளர்ச்சி, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத் துறை ஆகியவை கைலாஷ் கெலாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதுபோல ராஜ்குமார் ஆனந்துக்கு கல்வி, நிலம் மற்றும் கட்டுமானம், லஞ்ச ஒழிப்பு, சுற்றுலா, கலை, கலாசாரம் மற்றும் மொழி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் தொழில் துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், ராஜிநாமா செய்துள்ள மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினுக்கு பதிலாக, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சௌரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை புதிய அமைச்சர்களாக நியமிக்க முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.