பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் திங்கள்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்கள் பலியாகியுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர்.
குவெட்டா சிபி நெடுஞ்சாலையில் உள்ள காம்ப்ரி பாலத்தில் பலுசிஸ்தான் காவலர்களின் டிரக் அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தற்கொலைத் தாக்குதல் என்று கச்சியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் மெஹ்மூத் நோட்ஜாய் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் நிர்வாகமும், பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பலுசிஸ்தான் பாதுகாப்புப் பணியாளர்கள் பணி முடிந்து திரும்பும்போது இந்த குண்டுவெடிப்பின் காரணமாக டிரக் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்த பணியாளர்கள் சிபி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையோரப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.