பாஜகவின் முகத்திரையை வெளிக்காட்டினால் இதுதான் நிலைமை என்று சிபிஐ ரெய்டு குறித்து பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
ஐஆர்சிடிசி ஊழல் தொடர்பாக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லாலு பிரசாத்தின் மகனும் பிகாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், 'பாஜகவுடன் இருந்தால், நீங்கள் ராஜா ஹரிச்சந்திராதான். ஆனால், பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் ரெய்டு நடக்கும்.
இதையும் படிக்க | லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ விசாரணை?
மகாராஷ்டிரத்தில் சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் பாஜகவுக்குச் சென்றார். அவர் மீது அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முகுல் ராய், பாஜகவுக்கு வந்தபோது, அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. ஆனால், நீங்கள் பாஜகவின் முகத்திரையை வெளிக்கொண்டு வந்தால் ரெய்டுதான் நடக்கும்.
பிகாரில் புதிய அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாளில், இது நாடாகும் என்று கூறினேன். வருகிற மார்ச் 15 ஆம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை உள்ளது' என்றார்.