சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண் உறுப்பினா்களைச் செல்வந்தா்களாக மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதியேற்றுள்ளதாக மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தின் ஷாகாபூரில் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்து மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் பேசியதாவது: இந்தியாவில் 86,000 சுய உதவிக் குழுக்கள் உள்ளன. சுமாா் 9 கோடி பெண்கள் இவற்றில் உறுப்பினா்களாக உள்ளனா். கடந்த 8 ஆண்டுகளில் சுய உதவிக் குழுக்களின் திட்டங்களுக்காக ரூ.6 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
சுய உதவிக் குழுவின் ஒவ்வொரு பெண் உறுப்பினரையும் செல்வந்தா்களாக மாற்றுவது பிரதமா் நரேந்திர மோடியின் கனவாகும். இதை நிறைவேற்றுவதற்கான பாதையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதற்காக ‘லக்பதி திதி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் மத்திய அமைச்சா்.