/

பழைய நோட்டுகளின் எழுதாத பக்கங்கள்.. மாணவரை பாராட்டிய மோடி

எழுதப்படாத பக்கங்களை தனியாக திரட்டி பைண்டிங் செய்து பயன்படுத்துவதை, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருக்கிறார்.

News image
பழைய நோட்டுகளின் எழுதாத பக்கங்கள்.. மாணவரை பாராட்டிய மோடி
Updated On :7 பிப்ரவரி 2024, 6:42 am

DIN

பெங்களூரு: தேர்வு முடிந்த கையோடு முதல் வேளையாக பழைய நோட்டுகளை எல்லாம் எடைக்குப் போட எடுத்துச் செல்பவர்களே அதிகம். ஆனால், பெங்களூருவில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், எழுதப்படாத பக்கங்களை தனியாக திரட்டி பைண்டிங் செய்து பயன்படுத்துவதை, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருக்கிறார்.

நிச்சயம் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் இதுபோன்ற ஒன்றை செய்திருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் இவ்வாறு திரட்டி அதனை பைண்டிங் அல்லது ஸ்பைரல் பைண்டிங் செய்ய யாருக்கும் ஆர்வமிருப்பதில்லை. எனவே, எழுதிய பக்கங்களுடன் எழுதாத பக்கங்களும் பழைய பொருள்களை வாங்கும் கடைக்குத்தான் செல்கின்றன.

பெங்களூருவில் தனது மகன், எழுதாத நோட்டுப் பக்கங்களை திரட்டி வைத்திருப்பதை, அவரது தந்தை இதய சிகிச்சை மருத்துவர் தீபக் கிருஷ்ணமூர்த்தி டிவிட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார்.

ஒவ்வொரு கல்வியாண்டும் முடிந்ததும், எழுதாத நோட்டுப் பக்கங்களை மகன் ஆதித்யா தீபக் தனியே பிரித்து எடுத்து வைப்பார். அதனை நான் பைண்டிங் செய்து தருவேன். அதனை பள்ளியின் இதர பயன்பாட்டு நோட்டாக மகன் பயன்படுத்திக் கொள்வான் என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு பலராலும் விரும்பப்பட்டு வந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி, இந்த செயலை பாராட்டி டிவீட் செய்திருந்தார்.

மிகச் சிறந்த குழுப் பணி. உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் பாராட்டுகள். இதுபோன்று பழையவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையிலான செயல்களை அனைவரும் பகிருங்கள் என்றும் வலியுறுத்தியிருந்தார் பிரதமர் மோடி.

தங்களது டிவிட்டர் பதிவை பிரதமர் நரேந்திர மோடி ரீடிவீட் செய்ததால் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர் குடும்பத்தினர். பெருமையும் அடைந்தனர். 

மற்றவர்களுக்கும் பயன்படுமே என்றுதான் இதனை பகிர்ந்ததாகவும், ஆனால் பிரதமர் மோடியே இதனை ரீடிவீட் செய்வார் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்றும். இதன் மூலம் மேலும் பலருக்கு இது சென்று சேர்ந்திருப்பதாகவும் தீபக் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.