இந்தியர்கள் ஆஸ்கர் விருதை வென்றதில் பாஜக பங்கெடுத்துக்கொள்ளக்கூடாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அப்போது ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் மற்றும் எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற தமிழ் ஆவணப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது அவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவர்களின் வெற்றியில் பாஜக பங்கெடுத்துக்கொள்ளக்கூடாது. படத்தை மோடி இயக்கினார் என அவர்கள் கூறக்கூடாது எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக அவையில் பேசிய பியூஷ் கோயல், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் கதையாசிரியர் வி. விஜயேந்திர பிரசாத்தின் திறமையை அடையாளம் கண்டு மாநிலங்களவை உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரை செய்ததாகக் குறிப்பிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.