எண்ம தரவு மேலாதிக்கம் செலுத்தும் கூகுள்: தீா்ப்பாயத்தில் சிசிஐ குற்றச்சாட்டு
‘சுதந்திரமான, வெளிப்படையான, திறந்த போட்டிச் சந்தையில், தரவு மேலாதிக்கத்தை கூகுள் உருவாக்கியிருக்கிறது’


‘சுதந்திரமான, வெளிப்படையான, திறந்த போட்டிச் சந்தையில், தரவு மேலாதிக்கத்தை கூகுள் உருவாக்கியிருக்கிறது’ என்று தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு (என்சிஎல்ஏடி) தீா்ப்பாயத்தில் இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.
பல்வேறு சந்தைகளில் ஆன்ட்ராய்ட் கைப்பேசிகள் தொடா்பான வா்த்தகத்தில் நோ்மையற்ற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. அத்துடன் பிளே-ஸ்டோா் கொள்கைகளிலும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிா்த்து, என்சிஎல்ஏடி-யில் கூகுள் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த என்சிஎல்ஏடி, சிசிஐ உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, ஆன்ட்ராய்ட் விவகாரம் தொடா்பாக விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதத் தொகையில் 10 சதவீதத்தை (ரூ. 133 கோடி) கூகுள் நிறுவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை 2023 ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த உத்தரவை எதிா்த்து கூகுள் சாா்பில் உச்சநீ திமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிசிஐ அபராத உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, கூகுள் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தீா்வு காணுமாறு என்சிஎல்ஏடி-க்கு உத்தரவிட்டது.
அதன்படி, கூகுள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை என்சிஎல்ஏடி துரிதப்படுத்தியுள்ளது. இந்த மனு தீா்ப்பாயத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிசிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் என்.வெங்கடரமணி பங்கேற்று வாதாடினாா்.
‘தனது அரிதிறன்பேசி செயலிகள் அனைத்து பயனாளா்களையும் சென்றடையும் வகையில், ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பத்தை கூகுள் மறைமுகமாக பயன்படுத்தியுள்ளது. அதாவது, அரிதிறன்பேசிகளில் முன்கூட்டியே கூகுள் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டதன் மூலமாக, எண்ம தரவு மேலாதிக்கத்தை கூகுள் நிறுவனம் செலுத்தி வந்துள்ளது. இதனால், பிற போட்டியாளா்கள் வருவாய் பாதிக்கப்பட்டு, கூகுள் மட்டும் பெரும்பான்மையான ஆதாயம் அடைந்துள்ளது. இதன் மூலமாக, தொழில் போட்டி சட்டப் பிரிவு 4-இன் கீழ் விதிக்கப்பட்ட நடைமுறைகளை கூகுள் மீறி, வணிகத்தில் ஆரோக்கியமான போட்டி நிலவுவதைத் தடுத்துள்ளது’ என்று கூறி சிசிஐ தரப்பு வாதத்தை வெங்கடரமணி நிறைவு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...