மணிப்பூரில் கலவரம் அதிகரித்து வரும் நிலையில், இரவு முதல் 9 ஆயிரம் பேரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் மெய்டீஸ் மற்றும் கூகி ஆகிய இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பழங்குடி மாணவர் அமைப்பு சார்பில் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நேற்று நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினரல்லாதோரும் பேரணியில் ஈடுபட்டதால், இருதரப்பிடையே மோதல் ஏற்பட்டது.
இதன் விளைவாக மலைகளையொட்டியிருந்த வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடைகள் எரிந்து சேதமடைந்தன.
இரு இன குழுக்களிடையே மோதல் காரணமாக கலவரம் நீடித்து வருகிறது. கலவரத்தை அடக்க மணிப்பூரில் 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இரவுமுதல் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவத்தினரும் அசாம் ஆயுதப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். தற்போதுவரை பொதுமக்களை 9 ஆயிரம் பேரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுரசந்த்பூர் பகுதியிலிருந்து 5 ஆயிரம் பேரும், இம்பால் 2 ஆயிரம் பேரும், மோரே 2 ஆயிரம் பேரும் மீட்கப்பட்டுள்ளனதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.