தெலங்கானாவில் சிறுவனின் தலையில் அடிபட்ட காயத்திற்கு தையல் போடாமல் ஃபெவிகுயிக் தடவிய மருத்துவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கசுகூர் பகுதியைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணாவும், அவரது மனைவி சுனிதாவும் வெள்ளிக்கிழமை தங்கள் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள தங்கள் மகனுடன் வந்தனர்.
திருமண நிகழ்வின் போது மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வம்சி கிருஷ்ணாவின் 7 வயது மகன் பிரவீன் சௌத்ரி, தவறுதலாக கீழே விழுந்து காயமடைந்துள்ளான். அவனுக்கு இடது கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டது.
வம்சி கிருஷ்ணா உடனடியாக சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர் குழந்தையின் காயத்திற்கு தையல் போடாமல் ஃபெவிகுயிக் தடவி சிகிச்சை அளித்தார். அந்த சிறுவன் வலியால் அழுதான்.
மருத்துவரின் செயலால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.