அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே பலத்த வெடிச் சப்தம் கேட்டதை தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
கடந்த 5 நாள்களில் மூன்றாவது முறையாக வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் பொற்கோயில் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
பொற்கோயில் அருகே விரைந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், வெடிச் சப்தம் கேட்ட பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண் உள்பட 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் ஆணையர் கூறுகையில், இது மூன்றாவது குண்டு வெடிப்பாக இருக்க வாய்ப்புள்ளது. வெடிச்சப்தம் கேட்ட கட்டடத்துக்கு பின்புறம் இருந்து சில வெடி பொருள்கள் கிடைத்துள்ளன. விசாரணைக்கு பிறகே முழுமையான விவரங்களை தெரிவிக்க முடியும் என்றார்.
முன்னதாக கடந்த மே 6 மற்றும் 8-ஆம் தேதிகளில் பொற்கோயில் அருகே பலத்த சப்தத்துடன் வெடிப்பொருள்கள் வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் காவல்துறையினர், தடவியல் நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.