புதுதில்லி: ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இதற்குத்தான பிரதமர் படித்திருக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் விமரிசித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
முதலில் ரூ.2,000 நோட்டு கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்றார். இப்போது, ரூ.2,000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
அதனால்தான் நாங்கள் சொல்கிறோம், பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவருக்கு எதுவும் புரியாது. பொதுமக்கள் தான் கஷ்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கோரி வழக்கு தொடுத்த முதல்வர் கேஜரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதற்கு, பிரதமர் எவ்வளவு படித்திருக்கிறார் என்று தெரிந்துகொள்வதற்கு இந்த தேச மக்களுக்கு உரிமை இல்லையா?, தனது பட்டம் சான்றிதழ்களை நீதிமன்றத்தில் காண்பிப்பதற்கு ஏன் இத்தனை தயக்கம்?, ஆவணங்களை கோரியதற்கு அபராதமா?, நாட்டில் என்ன நடக்கிறது? என்று கேஜரிவால் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.