தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் அறிவித்த 5 தேர்தல் வாக்குறுதிகளும் செயல்படுத்தப்படும் என கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சித்தராமையா தெரிவித்தார்.
மக்கள் எதிர்பார்க்கும் நிர்வாகத்தினை வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார். கர்நாடக முதல்வராக இன்று (மே 20) பதவியேற்றுக் கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சித்தராமையா பேசியதாவது: மக்கள் எங்களிடமிருந்து எதிர்பார்க்கும் சிறந்த நிர்வாகத்தினை வழங்குவோம். அமைச்சரவைக் கூட்டத்தில் 5 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகள் இன்று முதல் அமல்படுத்தப்படும். மக்களது ஆசிர்வாதம் இல்லையென்றால் காங்கிரஸ் கர்நாடகத்தில் ஆட்சியமைத்திருக்க முடியாது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் வெற்றிக்கு காரணமாக இருந்த ராகுல் காந்திக்கு எனது நன்றி. அவரது பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை பயணத்தில் இருந்தே தேர்தல் பரப்புரை தொடங்கியது. இந்த 5 வாக்குறுதிகள் தவிர்த்து காங்கிரஸின் மற்ற வாக்குறுதிகளும் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றார்.
அனைத்து குடியிருப்புகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள நபர் ஒருவருக்கு 10 கிலோ இலவச அரிசி, படித்து வேலையின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 மற்றும் டிப்ளமோ படித்து வேலையின்றி இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு மற்றும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் போன்ற 5 தேர்தல் வாக்குறுதிகளை கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.