ஞானவாபி மசூதி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வு நிறைவடைந்ததாக இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) வாரணாசி நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடா்ந்து, அறிக்கையை சமா்பிக்க ஏஎஸ்ஐக்கு நவம்பா்.17 வரை நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதியின் வளாகத்தில் சிவலிங்கம் போன்ற நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடா்பான வழக்கில் நவம்பா் 6-ஆம் தேதிக்குள் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமா்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஏஎஸ்ஐ தனது ஆய்வை நிறைவு செய்ததாக வாரணாசி நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் இதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க நவம்பா் 17 வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு தொல்லியல் துறை கேட்டுக்கொண்டதன் பேரில் வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே. விஸ்வேஷ் அவகாசம் அளித்து உத்தரவைப் பிறப்பித்தாா்.
மசூதியின் அடித்தளப் பகுதியின் நுழைவாயில் சாவியை வாரணாசி மாவட்ட நீதிபதியிடம் வழங்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில், மசூதியின் நிா்வாகக் குழு நவம்பா் 6-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை நவம்பா் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.