சத்தீஸ்கர் மகளிர் காங்கிரஸ் கட்சியை நம்பினார்கள் என்றும், ஆனால் அவர்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றிவிட்டதாகவும் மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுபானங்கள் தடை செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. ஆனால், தற்போதுவரை அதனை காங்கிரஸ் கட்சி செய்ய வில்லை எனவும் விமர்சித்தார்.
சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதாவை ஆதரித்து அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது, பல ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநில மகளிரை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது. மாநிலத்தில் மதுபானத்தை தடை செய்வதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்திருந்தது. மாநிலத்தில் முழுவதுமாக மதுபானக் கடைகள் ஒழிக்கப்படும் என பெண்களை நம்பவைத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போதுவரை மதுபானங்களுக்குத் தடை விதிக்கவில்லை. ஆனால், அவர்கள் ரூ.2,000 கோடி வரை ஊழல் செய்தார்கள் என விமர்சித்துள்ளார்.