உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் மாவட்டத்தின் பெயரை ஹரிகர் என மாற்றம் செய்ய நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரத்தில் உள்ள ஒளரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டங்களின் பெயர் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் அலிகரின் பெயரை மாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அலிகர் நகராட்சி மன்றக் கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் சஞ்சய் பண்டித் முன்மொழிந்த பெயர் மாற்ற தீர்மானம் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், மாநில அரசின் ஒப்புதலுக்கு பிறகே அலிகரின் பெயர் ஹரிகர் என்று மாற்றம் செய்ய முடியும்.
இதுகுறித்து நகராட்சித் தலைவர் பிரசாந்த் சிங்கால் கூறுகையில், “பாஜக கவுன்சிலர் கொண்டுவந்த பெயர் மாற்ற தீர்மானம், அனைத்து கவுன்சிலர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் அடுத்தகட்ட ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நகராட்சி தீர்மானத்துக்கு அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்தாண்டு பாஜக கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ஹைதராபாத்தை ‘பாக்யாநகர்’ என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.