மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் பிரஹலாத் படேலின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசத்தில் நரசிங்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் சிந்த்வாரா சட்டமன்றத் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்கு எதிராக போட்டியிடும் பாஜக வேட்பாளர் பூந்தி சாஹூவுக்காகப் பிரச்சாரம் செய்துவிட்டு பிரஹலாத் படேல் மீண்டும் நரசிங்பூருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அமர்வாரா பகுதியில் உள்ள சிங்கோடி என்ற இடத்தில் வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் தனது மகனுடன் வந்த நிரஞ்சன் சந்திரவன்ஷி என்ற ஆசிரியர் உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த ஜதின் (17), சன்ஸ்கர் (10) மற்றும் நிகில் (7) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.